நாட்டு மாடு தினமும் 20 லிட்டர் பால்... மாதம் ரூ.60 ஆயிரம் வருமானம்! ***பஞ்சகவ்யா*** | பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil நாட்டு மாடு தினமும் 20 லிட்டர் பால்... மாதம் ரூ.60 ஆயிரம் வருமானம்! ***பஞ்சகவ்யா*** ~ பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

திங்கள், 2 ஜனவரி, 2017

நாட்டு மாடு தினமும் 20 லிட்டர் பால்... மாதம் ரூ.60 ஆயிரம் வருமானம்! ***பஞ்சகவ்யா***


தினமும் 20 லிட்டர் பால்... மாதம் ரூ.60 ஆயிரம் வருமானம்!
ஆரம்பக் காலத்தில் பஞ்சகவ்யா கரைசலைப் பயன்படுத்தியவர்கள், அதைப் பரவலாக விவசாயிகளிடம் எடுத்துச் சென்றவர்கள் குறித்த தொடர் இது. பயிர்களுக்கும் மட்டுமல்ல, உயிர்களுக்கும் உகந்தது பஞ்சகவ்யா என்பதையும் பல முன்னோடி விவசாயிகள் நிரூபணம் செய்துள்ளனர். அந்த வகையில் கால்நடை வளர்ப்பில் பஞ்சகவ்யாவின் பங்களிப்புக் குறித்துப் பகிர்ந்துகொள்கிறார், திருப்பூர் மாவட்டம், முத்தூர் பகுதியைச் சேர்ந்த முன்னோடி இளம் விவசாயி நந்தகுமார்.
   
நந்தகுமாரின் தோட்டத்துக்கு நாம் சென்றபோது, களத்துமேட்டில் கட்டப்பட்டிருந்த நாட்டு மாடுகளுக்கு மூங்கில் குழாய் மூலம் பஞ்சகவ்யா கரைசலைக் கொடுத்துக் கொண்டிருந்தார், அவர். நம்மைக் கண்டதும் வரவேற்றுப் பேச ஆரம்பித்தார், நந்தகுமார். 

“நான் இன்ஜினீயரிங் படிச்சிட்டு விவசாயத்துல இறங்கிட்டேன். இங்க 25 நாட்டுமாடுகளை வளர்க்கிறேன். இந்த மாடுகள் மூலமா கிடைக்கிற சாணம், சிறுநீர், பால், தயிர், நெய்... பொருட்களைப் பயன்படுத்திதான் பஞ்சகவ்யா தயாரிக்கிறேன். பயிர்களுக்குக் கொடுத்தது போக, மீதம் இருக்குற பஞ்சகவ்யாவை விற்பனையும் செய்றேன். இப்போ, நாட்டுப் பசும்பாலுக்குத் தேவை அதிகமாயிட்டே வருது. கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர் பகுதிகள்ல ஒரு லிட்டர் பால் சுமார் 100 ரூபாய் வரை விற்பனையாகுது. எங்கிட்ட இப்போதைக்கு 7 நாட்டு மாடுகள்தான் கறவையில இருக்கு. எங்க தேவை போக மீதியை விற்பனை செய்றேன். தினமும் 20 லிட்டர் அளவுக்குப் பால் விற்பனை  செஞ்சிட்டிருக்கேன். ஒரு லிட்டர் பால் ரூ.70-க்கு விற்பனை செய்றேன். இதன்படி தினமும், 1,400 ரூபாய் வருமானம் கிடைக்குது. ஆக மாசத்துக்கு பால் மூலமா 42 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்குது. பால் உற்பத்தி அதிகரிச்சு, நேரடியா பாலை விற்பனை பண்ணும்போது, இன்னும் கூடுதல் வருமானம் கிடைக்கும். விவசாயத்துல நல்ல வருமானம் கிடைக்கிறதாலதான், சாஃப்ட்வேர் கம்பெனிகள்ல கிடைச்ச வேலைகளை விட்டுட்டு இங்க வந்துட்டேன்” என்று முன்னுரை கொடுத்த நந்தகுமார் தொடர்ந்தார்.

“மாடுகள் அதிகமா இருக்குறதால ஒண்ணு மாத்தி ஒண்ணுக்கு ஏதாவது வியாதி வந்துடும். ஆனா, நான் மாடுகளுக்கு அலோபதி மருந்துகளை உபயோகப்படுத்துறதில்லை. மாடுகளுக்கு முழுக்க முழுக்க பஞ்சகவ்யா வைத்தியம்தான். கால்நடைகளுக்கும் பஞ்சகவ்யா கொடுக்கலாம்னு சொல்லிக் கொடுத்தவர், ‘கொடுமுடி’ டாக்டர் நடராஜன் ஐயாதான். அவரோட ஆலோசனைப்படிதான் மாடுகளுக்குப் பஞ்சகவ்யா கொடுத்து வருமுன் காக்கும் வைத்தியம் செஞ்சுக்குறோம். 50 மில்லி வடிகட்டிய பஞ்சகவ்யாவை தண்ணீர் கலக்காமல் கன்னுக்குட்டிகளுக்கு மாசம் ஒரு வாட்டி கொடுக்கிறோம். இதனால, நோய் எதிர்ப்புச் சக்தி கூடுது. கன்னுக்குட்டிகள் மண்ணைத் தின்னு வயிறு உப்பிப் போய் மூச்சுவிட சிரமப்படுற சமயத்துல 100 மில்லி பஞ்சகவ்யாவை மூணு நாளைக்குக் கொடுத்தா சரியாகிடும்.
மேய்ச்சலுக்குப் போற நாட்டு மாடுகள் சில சமயங்கள்ல இளம் சோளப்பயிர்களைத் தின்னுடுச்சுன்னா ‘சொக்கிப் போயிடும்’. இதனால வயிறு உப்பி, எந்திரிக்க முடியாமப் போயிடும். இதுக்கு உடனே வைத்தியம் பார்க்காட்டி மாடு செத்துப் போயிடும். 500 மில்லி பஞ்சகவ்யாவை மூங்கில் குழாய்ல நிரப்பி நேரடியா தொண்டைக்குள் போகுற மாதிரி ஊத்தி விடணும். ரெண்டு மணிநேரம் கழிச்சு மறுபடியும் அதே அளவு பஞ்சகவ்யாவை வாயில ஊத்திவிட்டு, ஒரு மணி நேரம் வரைக்கும் தீவனம் கொடுக்காம மரத்தடியில தனியா கட்டி வெச்சா... கொஞ்ச நேரத்துல வயித்துப் பொருமல் நீங்கி, மாடு அசைபோட ஆரம்பிச்சுடும். சாணம், சிறுநீர் ரெண்டும் முழுசா வெளியேறிடும். அப்புறமா அந்த மாட்டுக்குத் தண்ணீர் காட்டணும். நல்லா தண்ணி குடிச்சுட்டுப் பசுந்தீவனத்தைச் சாப்பிட ஆரம்பிச்சுடும். தொடர்ந்து அஞ்சு நாளைக்கு 200 மில்லி பஞ்சகவ்யாவைக் கொடுத்துட்டு வந்தா, சொக்கிப் போன மாடு முழுசா குணமடைஞ்சிடும்” என்ற நந்தகுமார்,

 நிறைவாக
“கால்நடைகளுக்கு வைக்கோல், சோளத்தட்டை மாதிரியான உலர்தீவனம் ரொம்ப அவசியம். இதை மொத்தமா கிடைக்கிறப்போ வாங்கிப் போர் போட்டுக்குவோம். அப்படிப் போர் போடுறப்போ, வரிசையா கத்தைகளை அடுக்கி, அது மேல 3 சதவிகித பஞ்சகவ்யா கரைசலை வேப்பிலையில முக்கி நல்லா தெளிச்சு விடுவோம். இதேமாதிரி ஒவ்வொரு அடுக்குக்கும் செஞ்சுவிட்டா உலர்தீவனத்துல சுவை கூடிடும். சத்தானதாகவும் மாறிடும். 

அதேமாதிரி மடிவீக்கம் கண்ட பசுக்களுக்கு 200 மில்லி பஞ்சகவ்யா கொடுத்து... மடிகள்லயும் பூசி விடுவோம். இதுமாதிரி ரெண்டு மாசம் காலையிலயும் சாயங்காலமும் செஞ்சா மடிவீக்கம் குணமாகிடும். கன்னுக்குட்டியா இருந்தாலும் சரி, வளர்ந்த மாடா இருந்தாலும் சரி, அதுக்கு குடற்புழு நீக்கம் அவசியம். கன்னுக்குட்டிகளுக்கு அதிகாலை நேரத்துல வெறும் வயித்துல 100 மில்லி பஞ்சகவ்யாவை தொடர்ந்து மூணு நாளைக்குக் கொடுத்தா குடற்புழுக்கள் வெளியேறிடும். மாடுகளோட வயசுக்கேத்த மாதிரி பஞ்சகவ்யா அளவைக் கூட்டிக்கலாம் இதேமாதிரி கால்நடைகளுக்கு கொடுக்கப்படும் பஞ்சகவ்யாவை வடிகட்டியே கொடுக்க வேண்டும்” என்ற எச்சரிக்கை சொல்லிவிட்டுக் கன்றுகளுக்குப் பஞ்சகவ்யா கொடுக்க ஆரம்பித்தார்.

தொடர்புக்கு, நந்தகுமார், செல்போன்: 96980 57805

“மீன்களுக்குப் பஞ்சகவ்யா கொடுக்கலாமா?”
பசுமை விகடன் வாசகர்கள் பலர், ‘கொடுமுடி’ டாக்டர் நடராஜனைத் தொடர்பு கொண்டு பஞ்சகவ்யா குறித்த பல சந்தேகங்களைக் கேட்டு வருகிறார்கள். டாக்டர் நடராஜனிடம் வாசகர்கள் கேட்ட கேள்விகள், அதற்கு அவர் அளித்த பதில்கள் ஆகியவற்றில் சில இங்கே இடம்பெறுகின்றன. 

“கோ சஞ்சீவி என்பது என்ன... அது எதற்குப் பயன்படுகிறது?”
ஆர்.செண்பகவல்லி, கோவில்பட்டி. 

“கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்களுக்கு உடனடி நிவாரணம் கொடுக்கும் மூலிகைப் பொடி, கோ சஞ்சீவி. இதை எளிதாக நாமே தயாரித்து கால்நடைகளுக்குக் கொடுக்கலாம்.
அமுக்கிரா கிழங்கு, உசிலை இலை (அரப்பு இலை), வேப்பிலை ஆகியவற்றில் தலா 300 கிராம் எடுத்துக்கொள்ளவும். சீந்தில் இலை கொடி, நிலவேம்புச் செடி ஆகியவற்றில் தலா 50 கிராம் எடுத்துக் கொள்ளவும். இந்த ஐந்து பொருட்களையும் மூன்று நாட்கள் நிழலில் காயவைத்து... உரலில் இடித்து நன்றாகப் பொடியாக்கினால், அதுதான் கோ சஞ்சீவி. இதில் 50 கிராம் பொடியை ஆடு மாடுகள் குடிக்கும் தண்ணீர் அல்லது தீவனத்தில் கலந்து கொடுத்து வந்தால், பருவத்தில் சினைப்பிடிக்கும். நன்றாகத் தீவனம் எடுக்கும். பிறக்கும் கன்றுகள் ஆரோக்கியமாக இருக்கும். அதிகப் பால் சுரக்கும்.” 

“வளர்ப்பு மீன்களுக்குப் பஞ்சகவ்யா கொடுக்கலாமா?”
மு.சக்கரபாணி, பாமணி, நாகப்பட்டினம். 

“தாராளமாக கொடுக்கலாம். சாணத்துடன் கூடிய பஞ்சகவ்யாவை மீன் குட்டையில் போட்டுவர, நீர்த் தாவரங்களும், புழு, பூச்சிகளும் அதிகமாக உருவாகும். அது மீன்களுக்கு ஊட்டமான உணவாக மாறும். குளத்தில் புதிதாகத் தண்ணீர் விடும்போது சாணம் கலந்த பஞ்சகவ்யா ஊற்றுவது நல்லது. இடைப் பருவத்தில் மீன் குட்டையில் பஞ்சகவ்யா கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.”

தொடர்புக்கு, டாக்டர் நடராஜன், செல்போன்: 94433 58379.

பரிசோதனைகள் தொடரும்!
கால்நடைகளுக்குப் பஞ்சகவ்யா கொடுப்பது குறித்துப் பேசிய டாக்டர் நடராஜன், “நானும், கால்நடை மருத்துவர் ஆறுமுகமும் சேர்ந்து ஆடு, மாடு, கோழி, நாய்னு பஞ்சகவ்யா கொடுத்துச் சோதனைகள் செஞ்சோம். சோதனைகளைச் செய்யச் சொன்னவர், நம்மாழ்வார் அய்யாதான். அந்தச் சோதனைகள்ல நல்ல தீர்வு கிடைச்சது. கால்நடைகளுக்குப் பஞ்சகவ்யாவை மேல்பூச்சா பூசும்போது தோல் உண்ணி தொல்லையும் நீங்குச்சு. முடி உதிர்வது குறைஞ்சு தோல் பளபளப்பா மாறுச்சு.

ரொம்ப நாள் சினைப்பிடிக்காம இருந்த பசுமாடுகளுக்கு 200 மில்லி பஞ்சகவ்யாவை தினமும் கொடுத்தப்போ, மூணு மாசத்துல சினைக்குத் தயாரானது. இதுமாதிரி இன்னும் நிறைய சோதனைகள் செஞ்சுதான் கால்நடைகளுக்குப் பஞ்சகவ்யாவைப் பரிந்துரைச்சோம். இன்னமும் சோதனைகள் தொடர்ந்துட்டுதான் இருக்கு” என்றார்.
கழிச்சலைத் தடுக்கும் பஞ்சகவ்யா!

சேவல்களுக்குப் பஞ்சகவ்யா கொடுத்து சிறப்பான முறையில் வளர்த்து வருவதாக, ஈரோடு மாவட்டம், சிவகிரி பகுதியைச் சேர்ந்த சீனுவை நமக்குப் பரிந்துரைத்தார், டாக்டர் நடராஜன். சீனுவின் பண்ணையில் அவரைச் சந்தித்தோம். 

“டாக்டரோட சிஷ்யர் புரவிமுத்து என்னோட நண்பர். அவர் மூலமாகத்தான் சேவல்களுக்கும் பஞ்சகவ்யா கொடுக்கலாம்னு தெரிஞ்சிகிட்டேன். டாக்டர்தான் பஞ்சகவ்யாவ தயாரிக்கிற, பயன்படுத்துற முறைகள சொல்லிக் கொடுத்தார். எங்கிட்ட கீரி, மயிலு, காகம், வல்லூறு, ஆந்தை, பொன்னிறம்னு பல ரகங்கள்ல 150 சண்டைச் சேவல்கள் இருக்கு. வெள்ளைக்கழிச்சல் நோய்தான் கோழி இனங்களுக்கு எமன். கோடைகாலத்துல இந்த நோய் தாக்கும். ஒரு கோழிக்கு கழிச்சல் வந்திட்டா, எல்லா கோழிகளுக்கும் வேகமாப் பரவ ஆரம்பிச்சுடும். இதைச் சரியா கவனிக்காட்டி கோழிகளைக் காப்பாத்த முடியாது. முறையா பஞ்சகவ்யா கொடுக்குற கோழிகளுக்கு, இந்த நோய் தாக்குறதில்லை. வெயில் காலங்கள்ல கோழிகள் தண்ணீர் அதிகமா குடிக்கும். அதனால குடிநீர்லயே பஞ்சகவ்யாவைக் கலந்து வெச்சுடணும். 100 மில்லி தண்ணீருக்கு 3 மில்லி பஞ்சகவ்யானு கலந்து வெச்சுடணும். குறிப்பா பருவம் மாறுற காலங்கள்லயே இதைத் தொடர்ந்து கொடுக்க ஆரம்பிச்சிட்டா, கழிச்சல் நோய் தாக்காது. கம்பு, சோளம், மக்காச்சோளம், கேழ்வரகு மாதிரியான சிறுதானியங்களை, வடிகட்டிய 3 சதவிகித பஞ்சகவ்யா கரைசல்ல நனைச்சு, நிழலில் உலர்த்தி வாரம் ஒரு நாள் கொடுப்போம். அதனால எதிர்ப்புச் சக்தி அதிகரிச்சு எந்த நோயும் வர்றதில்லை” என்றார். 

தொடர்புக்கு: சீனு, செல்போன்: 85268 54774

#TNneed jallikattu

Popular Posts

Facebook

Blog Archive